/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கனரக வாகனங்களால் பல்லாங்குழியான பழவேரி சாலை
/
கனரக வாகனங்களால் பல்லாங்குழியான பழவேரி சாலை
ADDED : அக் 21, 2025 11:43 PM

பழவேரி: கனரக வாகனங்கள் இயக்கத்தால் பழவேரி - திருமுக்கூடல் இடையிலான சாலை பயன்பாட்டிற்கு லாயக்கற்று பல்லாங்குழியாக மாறி உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேரி கிராமத்தில், சுண்ணாம்புக்குளம் அருகே பிரிந்து, பினாயூர் மலையடிவாரம் வழியாக திருமுக்கூடல் பாலாற்று பாலத்தை இணைக்கும் 3 கி.மீ., கொண்ட சாலை உள்ளது.
மதுார், சிறுதாமூர், சித்தாலப்பாக்கம், பட்டா, பினாயூர், அருங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பழவேரி மற்றும் பினாயூர் மலையடிவார சாலை வழியாக இயக்கப்படுகிறது.
அதிக பாரம் ஏற்றி செல்லும் இந்த வாகனங்களால் இச்சாலை மிகவும் சேதமடைந்து, கார், வேன் மற்றும் பைக்குகளை இயக்குவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், தற்போது பருவ மழைக்காலம் துவங்கி உள்ளதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி சகதியாக உள்ளது.
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பழுதான இச்சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.