/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முழு நேர வி.ஏ.ஒ., நியமனம் செய்ய கோரிக்கை
/
முழு நேர வி.ஏ.ஒ., நியமனம் செய்ய கோரிக்கை
ADDED : நவ 29, 2024 08:08 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சியில், காட்டாங்குளம், படூர் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியர் ஓராண்டுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து, சிறுமயிலூார் பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலர், காட்டாங்குளம் மற்றும் படூர் வருவாய் கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் பணி சுமை, கூடுதல் தூரம் போன்ற சிரமங்களால் சரி வர செயல்படாத நிலை உள்ளது. இதனால், காட்டாங்குளம் மற்றும் படூர் பகுதியினர், வருவாய் துறை சம்பந்தமான சேவைகளை பெறுவதில் சிரமப்படுகின்றனர்.
எனவே, படூர், காட்டாங்குளம் ஆகிய வருவாய் கிராமத்திற்கு முழு நேரம் பணியாற்றும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து காட்டாங்குளம் பகுதியினர் கூறியதாவது:
காட்டாங்குளம், படூர் உள்ளடங்கிய வருவாய் கிராமத்திற்கு நிரந்தர வி.ஏ.ஓ., நியமனம் கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.
உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலக கவனத்திற்கு இதுகுறித்து தெரியப்படுத்தி உள்ளதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என, பதில் அளிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கை இல்லாமல் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

