/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஏரி பகுதியில் பூங்கா அமைக்க கோரிக்கை
/
உத்திரமேரூர் ஏரி பகுதியில் பூங்கா அமைக்க கோரிக்கை
ADDED : மார் 31, 2025 01:24 AM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்றாக இருப்பது உத்திரமேரூர் ஏரி. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஏரி, 4,000 ஏக்கர் பரப்பளவும், 20 அடி ஆழமும் கொண்டது. ஏரி முழுமையாக நிரம்பும்போது உபரி நீர் வெளியேற 3 கலங்கல்களும், விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க 18 மதகுகளும் உள்ளன.
இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தி, 5,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இந்த ஏரியில் தண்ணீர் இருக்கும்போது பார்ப்பதற்கு கடல்போல் காட்சியளிக்கும். இதை கண்டு ரசிக்க, உத்திரமேரூர், காஞ்சிபுரம், மானாம்பதி, திருப்புலிவனம், சாலவாக்கம், பெருநகர், செய்யாறு, வந்தவாசி, தூசி மாமண்டூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் ஏரிக்கு வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும்போது இப்பகுதியில் பொழுது போக்கு பூங்கா இல்லாததால், பொதுமக்கள் வந்த சிறிது நேரத்திலேயே திரும்பி சென்று விடுகின்றனர்.
இதேபோல, உத்திரமேரூரில் உள்ள குடவோலை கல்வெட்டு கோவில், கைலாசநாதர் கோவில் ஆகியவற்றுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரும் உத்திரமேரூர் ஏரியை கண்டு ரசித்து வருகின்றனர்.
எனவே, உத்திரமேரூர் ஏரி பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.