ADDED : நவ 10, 2024 12:57 AM

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அடுத்த, பனப்பாக்கத்தில் இருந்து, வட்டம்பாக்கம் வழியாக, காஞ்சிவாக்கம் செல்லும் சாலை உள்ளது. நாட்டரசம்பட்டு, உமையாள்பரனசேரி, சிறுவஞ்சூர், வளையக்கரணை உள்ளிட்ட பகுதியினர், படப்பை, ஒரகடம், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்களில் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில், பெரும் பகுதிகளில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், இரவில் கும்மிருட்டான சாலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர்.
மேலும், இந்த சாலையில், வட்டம்பாக்கம் அருகே, காஞ்சிவாக்கம் ஏரி அருகே உள்ள வளைவில் தடுப்பு இல்லை. இதானல், தடுப்பு இல்லாத வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் நிலைத் தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், வளைவுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
