/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர ஆக்கிரமிப்பால் வாலாஜாபாதில் நெரிசல்
/
சாலையோர ஆக்கிரமிப்பால் வாலாஜாபாதில் நெரிசல்
ADDED : நவ 23, 2025 03:04 AM

வாலாஜாபாத்: கனரக வாகனங்கள் அதிகம் இயங்கும், வாலாஜாபாத் சாலையில், கடைகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று, காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஒரகடம், படப்பை, தாம்பரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பூந்தமல்லி போன்ற பகுதிகளுககும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன. இச்சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அடுத்து, ரயில் நிலையம், வங்கிகள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவையும் செயல் படுகின்றன.
இதனால், இந்த சாலையில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சாலையில், கனரக வாகனங்கள் அதிகம் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த சாலையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சிலர் சாலையோரத்தை ஆக்கிரமித்துள்ளனர். சாலையோரத்தில் வியாபார பொருட்கள் வைத்தல், கடை விளம்பர பலகை வைத்தல் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் போன்றவையாலும் சாலையோரம் ஆக்கிரமிக்கப்படுகிறது.
இதனால், வாலாஜாபாத் சாலை வழியாக இயங்கும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல இயலாமல் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தினமும் அவதி படுகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் சாலையில், கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

