/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வரத்தின்றி முள் காடாக மாறிய சாத்தணஞ்சேரி ஏரி
/
நீர்வரத்தின்றி முள் காடாக மாறிய சாத்தணஞ்சேரி ஏரி
நீர்வரத்தின்றி முள் காடாக மாறிய சாத்தணஞ்சேரி ஏரி
நீர்வரத்தின்றி முள் காடாக மாறிய சாத்தணஞ்சேரி ஏரி
ADDED : நவ 28, 2025 04:31 AM

சாத்தணஞ்சேரி, சாத்தணஞ்சேரி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், நீர் பிடிப்பு பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த முள் காடாக உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராமத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலான 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால், அந்த தண்ணீரைக் கொண்டு சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள 200 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
கடந்த 2020- - 21ம் ஆண்டு, இந்த ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ், 68.70 லட்சம் ரூபாய் செலவில், கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், ஏரி துார்வாருதல் மற்றும் ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால், ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தில் ஏரிக்கு நீர்வரத்தின்றி ஏரியில் பல்வேறு செடி, கொடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து வருகின்றன.
தற்போது பருவ மழைக்காலம் துவங்கி ஒரு மாதமாகியும், சாத்தணஞ்சேரி ஏரியில் ஒரு சொட்டு தண்ணீர்க்கூட இல்லாமல் கருவேல மரங்கள் உள்ளிட்ட பல வகை செடி, கொடிகள் வளர்ந்து காடு போன்று உள்ளது.
எனவே, இந்த ஏரியில் வளர்ந்துள்ள முள் மரங்களை வேரோடு அகற்றி துார்வாரி சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
சாத்தணஞ்சேரி ஏரிக்கு பினாயூர் பாலாற்றில் இருந்து வரும் வரத்து கால்வாய் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த கால்வாய் பினாயூர் உள்ளிட்ட பகுதிகளில் துார்த்தும், கட்டடங்கள் எழுப்பியும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக ஏற்கனவே வருவாய் துறையிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் கூறினார்.

