/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேருந்து படியில் தொங்கி மாணவர்கள் ஆபத்தான பயணம்
/
பேருந்து படியில் தொங்கி மாணவர்கள் ஆபத்தான பயணம்
ADDED : ஜூன் 16, 2025 11:58 PM

வாலாஜாபாத், வாலாஜாபாத் வழியாக, அரசு பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள், ஆபத்தை உணராமல், பேருந்து படியில் தொங்கி பயணிப்பது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக, தடம் எண் டி36, டி81, டி55 ஆகிய அரசு பேருந்துகள் திருமுக்கூடல், மதுார், ஆனம்பாக்கம், படூர், நெய்யாடிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு பேருந்து வாயிலாக பயணித்து, வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கல்விக் கூடங்களுக்கு செல்கின்றனர்.
அவ்வாறு பேருந்தில் பயணம் செய்யும்போது, மாணவர்கள் படியில் தொங்கி ஆபத்தான பயணம் செய்து எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவதாக பயணியர் பலரும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தாலும், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கின்றனர்.
சிலர் பேருந்தின் கூரையில் ஏறவும் முயற்சிக்கின்றனர். நடத்துநர், ஓட்டுநர்கள் கேட்கும்போது சிறிது நேரம் பேருந்துக்குள் வருவதை போல பாவனை செய்துவிட்டு மீண்டும் படிக்கட்டில் தொங்குகின்றனர்.
இதுகுறித்து கேட்கும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
பேருந்து படியில் தொங்கியபடி, கால்கள் தரையில் படும்படி சாகசம் செய்து மற்றவர்களை நடுங்க செய்கின்றனர்.
எனவே, வாலாஜாபாத் அடுத்த, புளியம்பாக்கம், பழையசீவரம், திருமுக்கூடல் உள்ளிட்ட வழி தடங்களில் போலீசார் கண்காணித்து, பேருந்து படியில் தொங்கியும், கூச்சலிட்டும் இடையூறு செய்யும் மாணவர்களை எச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.