/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி, செங்கையில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி...சரிவு!வெளிமாவட்ட கரும்புகளை நாடும் ஆலை நிர்வாகம்
/
காஞ்சி, செங்கையில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி...சரிவு!வெளிமாவட்ட கரும்புகளை நாடும் ஆலை நிர்வாகம்
காஞ்சி, செங்கையில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி...சரிவு!வெளிமாவட்ட கரும்புகளை நாடும் ஆலை நிர்வாகம்
காஞ்சி, செங்கையில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி...சரிவு!வெளிமாவட்ட கரும்புகளை நாடும் ஆலை நிர்வாகம்
ADDED : நவ 27, 2024 11:46 PM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ஆண்டுதோறும் கரும்பு சாகுபடி குறைந்து வருகிறது. அதனால், படாளத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டிற்கு 3 லட்சம் டன்னுக்கு மேல் இருந்த அரவை, தற்போது, 2 லட்சத்திற்கும் கிழ் சரிந்துள்ளது. அதனால், அரவைக்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, படாளம் பகுதியில், 1960ல், அப்போதைய முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்டது. அப்போது, இந்த சர்க்கரை ஆலையின் சாகுபடி பரப்பளவு, 12,000 ஏக்கர். துவக்கத்தில், நாள் ஒன்றுக்கு 750 டன் அரவைத்திறன் கொண்டது. முதல் ஆலை விரிவாக்கதின் போது, 1,750 டன்னாகவும், 1994 - -95ல், 2,100 டன்னாவும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, இந்த ஒரு சர்க்கரை ஆலை மட்டுமே உள்ளது. இந்த ஆலை புதிதாக துவங்கப்பட்ட போது, இரு மாவட்டத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள் பொருளாதாரரீதியாக வளர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கும் ஆலையில் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைத்தது.
நல்ல முறையில் இயங்கி வந்த ஆலையில், 1994 - -95 காலகட்டத்தில் சரிவு துவங்கியது. இந்த ஆலைக்கு உரிய சாகுபடி நிலங்களான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாத்தனஞ்சேரி பிர்கா உட்பட குறிப்பிட்ட பகுதிகளை பிரித்து, சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்டது.
தனியாருக்கு பிரித்து கொடுக்கும் முன், ஆண்டுக்கு 3 - 3.5 லட்சம் டன் அரவை கொண்ட படாளம் ஆலை, படிப்படியாக அரவை குறைந்து 2000 - 01ல் மூடப்பட்டது.
விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம், கோரிக்கையை ஏற்று, 10 ஆண்டுகளுக்கு பின், 2010ல், அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால், படாளம் சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.
இதற்கிடையில், 2015ல் சங்கராபுரம் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், தனியாருக்கு கொடுக்கப்பட்ட சாகுபடி நிலத்தை சேர்ந்த விவசாயிகள், மீண்டும் 2016 முதல் படாளம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் வழங்கி வருகின்றனர்.
சாகுபடி குறைவு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், நகரமயமாக்கல் காரணமாக விவசாயம் குறைந்து வருகிறது. அதிலும், கரும்பு விவசாயிகள், நெல் உள்ளிட்ட மாற்று பயிர்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு, 3 லட்சம் மெட்ரிக் டன் அரைத்த ஆலை, தற்போது 2 லட்சம் மெட்ரிக் டன் அரவைக்கு கரும்பு வருவது அபூர்வமாக உள்ளது. இந்த ஆலைக்கு உட்பட்ட சாகுபடி நிலங்களில், தற்போது 4,395 ஏக்கரில் மட்டுமே கரும்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:
செலவு குறைவு மற்றும் எளிதில் பணம் கைக்கு கிடைப்பதால், கரும்பு விவசாயிகள் மாற்று பயிர்களை நோக்கி செல்லும் சூழல் உருவாகி உள்ளது.
குறிப்பாக, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, கட்டுபடியாகாத கரும்பு விலை இவற்றால், கரும்பு விவசாயிகள் மாற்று பயிர்களை நோக்கி செல்கின்றனர். கரும்புக்கு விலையும், இரு தவணைகளாக வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு வழங்கும் டன்னிற்கு 2,919.45 ரூபாய், ஆலையில் கரும்பு போட்டு ஒரு மாதத்தில் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஆனால், மாநில அரசின் ஊக்க தொகை, 195 ரூபாய் ஏழு மாதங்கள் வரை காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை, ஆண்டுதோறும் மாற்றம் அடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கரும்பு சாகுபடி குறைந்து வருகிறது. வெட்டு கூலியும் அதிகரித்துள்ளது. ஆலையில் 12 கரும்பு வெட்டும் இயந்திரங்கள் கொடுத்த போதிலும், ஆட்களும் தேவைப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை, வெளி மாவட்டத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் மேஸ்திரிகள் ஏமாற்றி விட்டனர். 1,000 கிலோ கருப்பு உற்பத்திக்கு, 3,500 ரூபாய் வரை செலவாகிறது. எனவே, சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி, 1,000 கிலோவிற்கு 5,000 ரூபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.தனபால்,
தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
- நமது நிருபர் -