/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
65 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாத நுாலகம் மாங்காடில் பள்ளி கட்டடத்தில் இயங்கும் அவலம்
/
65 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாத நுாலகம் மாங்காடில் பள்ளி கட்டடத்தில் இயங்கும் அவலம்
65 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாத நுாலகம் மாங்காடில் பள்ளி கட்டடத்தில் இயங்கும் அவலம்
65 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாத நுாலகம் மாங்காடில் பள்ளி கட்டடத்தில் இயங்கும் அவலம்
ADDED : பிப் 10, 2025 03:38 AM

குன்றத்துார்:மாங்காடு நகராட்சியில், காமாட்சி அம்மன் கோவில் அருகே, 1960ம் ஆண்டு நுாலகம் அமைக்கப்பட்டது.
சாலை அமைக்கும் பணிக்காக, இந்த நுாலகம், 1969ம் ஆண்டு பாலாண்டீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி அருகே இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த இடம் இடநெறுக்கடியுடன் இருந்ததால், குன்றத்துார்- - குமணன்சாவடி நெடுஞ்சாலையில், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அரசு பள்ளி கட்டடத்தில், 1998ம் ஆண்டு மாற்றப்பட்டு, கிளை நுாலகமாக தற்போது வரை இயங்கி வருகிறது.
இங்கு, 35,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 2,500 பேர் உறுப்பினராகவும், 90 பேர் புரவலர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில், இந்த நுாலக கட்டடத்தின் கூரை சேதமடைந்தும், சுவர்கள் விரிசல் ஏற்பட்டும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால், நுாலகத்திற்குள் செல்லவே வாசகர்கள் அச்சமடைகின்றனர்.
மழை காலத்தில் கூரை வழியே தண்ணீர் ஒழுகி, தற்போது வரை, 10,000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வீணாகியுள்ளன. புதிய புத்தகங்கள் வைக்க இடமில்லாததால், அவை 10 மூட்டைகளில் கட்டி தரையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், அரசு தேர்வு எழுதும் மாணவர்கள், இந்த நுாலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
நுாலகத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றி, சேதமடைந்த நுாலக கட்டத்தை இடித்து அகற்றி, நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இடியும் நிலையில் உள்ள நுாலக கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி, முதல்வர் உட்பட அனைவருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் பயன்பாடின்றி உள்ளது. அங்கு நுாலகத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
- பழனி,
வாசகர், மாங்காடு.
மாங்காடு நுாலகத்திற்கு என, சொந்த கட்டம் இல்லை. இதனால், நுாலகத்துறை வாயிலாக சொந்த கட்டடம் கட்ட முடியவில்லை. புதிய கட்டடம் கட்டித்தருவதாக, மாங்காடு நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. தற்போது, சேதமான கட்டடத்தில் இருந்து, வேறு கட்டடத்திற்கு நுாலகத்தை தற்காலிகமாக இடம் மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
- கிருஷ்ணமூர்த்தி,
காஞ்சிபுரம் மாவட்ட நுாலகர்.