/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒழையூர் ஏரியை சீரமைக்க வலியுறுத்தல்
/
ஒழையூர் ஏரியை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 18, 2025 10:46 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஒழையூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி 200 ஏக்கர் பரப்பளவு உடையது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தி, 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது, இந்த ஏரி முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், ஏரியில் நாணல் புற்கள் வளர்ந்து மழை நேரங்களில் போதிய தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது.
தொடர்ந்து, நீர்ப்பிடிப்பு பகுதி மண்ணால் தூர்ந்து இருப்பதால், ஏரியில் முழுக் கொள்ளளவு நீர் சேகரமாக முடியாத சூழல் உள்ளது. கடந்த பருவ மழையின்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைவான அளவே தண்ணீர் சேகரமானது.
அந்த தண்ணீர் ஒரு போகத்திற்கு மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தினர். தற்போது, கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில் ஏரியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
இதனால், விவசாயிகள் ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால், ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி, சாகுபடி பரப்பை குறைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
எனவே, ஒழையூர் ஏரியை தூர்வார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.