/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்
/
சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்
ADDED : மே 18, 2025 01:47 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கண்டிகை ஊராட்சியில், அந்தோணிபுரம், சக்கலிபாளையம், மேட்டுப்பாளையம், மானாம்பதி கண்டிகை ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள, குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசை குழாய், கைக்குழாய் ஆகியவற்றின் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மானாம்பதி கண்டிகை கிராமத்தில் கிராம நூலகம் அருகே, 30 ஆண்டுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இத்தொட்டி, முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களில் கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.