/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜர் வனபோஜன உற்சவம் களக்காட்டூரில் விமரிசை
/
வரதராஜர் வனபோஜன உற்சவம் களக்காட்டூரில் விமரிசை
ADDED : ஜன 30, 2025 11:38 PM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன உற்சவம், ஆண்டுதோறும் தை மாதத்தில் நடந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான வனபோஜன உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
உற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில், மேனா பெட்டியில் எழுந்தருளி, கோவிலில் இருந்து புறப்பாடாகி, களக்காட்டூர் கிராமத்தின் முக்கிய வீதி வழியாக உலா வந்து அருள்பாலித்தார்.
சுவாமியை வரவேற்கும் விதமாக, களக்காட்டூரில் வீடுதோறும் வாசலில் வண்ணமயமான கோலமிடப்பட்டு, வீதிகளில் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, களக்காட்டூரில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்டு, ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபம் வழியாக பாலாற்றங்கரையில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு நைவேத்யம் செய்த பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 4:30 மணிக்கு, பாலாற்றங்கரையில் இருந்து புறப்பட்டு அண்ணா குடியிருப்பு, சதாவரம் மடம் வழியாக சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் தெரு சென்றார்.
அங்கு, சுவாமிக்கு மண்டகப்படி உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க ராஜவீதி தேசிகர் சன்னிதியில் எழுந்தருளினார். தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் புறப்பாடாகி, திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.