/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் கிளை நூலகம் படுமோசம் இடம் தேர்வு செய்வதில் தொடர் தாமதம்
/
வாலாஜாபாத் கிளை நூலகம் படுமோசம் இடம் தேர்வு செய்வதில் தொடர் தாமதம்
வாலாஜாபாத் கிளை நூலகம் படுமோசம் இடம் தேர்வு செய்வதில் தொடர் தாமதம்
வாலாஜாபாத் கிளை நூலகம் படுமோசம் இடம் தேர்வு செய்வதில் தொடர் தாமதம்
ADDED : செப் 21, 2024 01:22 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் அருகே கிளை நூலகம் இயங்கி வருகிறது. வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர், இந்த கிளை நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். 50க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர்.
வாலாஜாபாத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மாணவ - மாணவியர், இந்த நூலகத்திற்கு தினமும் வந்து செய்தித்தாள்கள் மற்றும் அரசு தேர்வு பாடநூல்கள், பொது அறிவு புத்தகங்கள் படித்து, தங்களது திறனை மேம்படுத்தி கொள்கின்றனர்.
இந்த நூலகம் போதுமான இடவசதி இல்லாமலும், பல ஆண்டுகளுக்கு முன், கட்டிய சேதமான பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது.
இதனால், கடந்தாண்டு பருவமழை காலத்தின் போது, முன்னெச்சரிக்கையாக இடம் மாற்றம் செய்து, தற்போது பேரூராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்படுகிறது. ஆனால், இந்த கட்டடமும் பழுதடைந்தும் உள்ளது.
இதனால், வாலாஜாபாத் கிளை நூலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, பொது நூலக துறையின் கீழ், வாலாஜாபாதில் கிளை நூலகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், புதிய கட்டடத்திற்கு இடம் தேர்வு செய்வதில், ஓராண்டாக தொடர்ந்து சிக்கல் நிலவுவதால், கட்டடத்திற்கான பணியும் தாமதமாகி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் கிளை நூலக ஊழியர் கூறியதாவது,
வாலாஜாபாத் கிளை நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நூலகத்துறை மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, பழைய நூலகம் உள்ள இடம், சாலையோரமாக உள்ளதால், மாற்று இடத்தில் நூலகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, வாலாஜாபாத் சித்தா மருத்துவமனை அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டரிடம் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளோம். அதற்கான அரசாணை கிடைத்த பின், புதிய நூலகத்திற்கான பணி துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.