/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் பாதாள சாக்கடை திட்டம் 12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அவலம் பேரூராட்சி பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேக்கம்
/
வாலாஜாபாத் பாதாள சாக்கடை திட்டம் 12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அவலம் பேரூராட்சி பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேக்கம்
வாலாஜாபாத் பாதாள சாக்கடை திட்டம் 12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அவலம் பேரூராட்சி பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேக்கம்
வாலாஜாபாத் பாதாள சாக்கடை திட்டம் 12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அவலம் பேரூராட்சி பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேக்கம்
ADDED : பிப் 04, 2025 12:45 AM

வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 1964ம் ஆண்டு, முதல் நிலை ஊராட்சியாக துவக்கப்பட்ட வாலாஜாபாத், 1982ல் தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
வாலாஜாபாத் அருகே ஒரகடம் சிப்காட் உருவானதற்கு பின், இப்பேரூராட்சியில் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்தன.
இதனிடையே, வாலாஜாபாத்தை சுற்றி உள்ள கட்டவாக்கம், சிங்காடிவாக்கம், வாரணவாசி, தேவேரியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தொழிற்சாலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, இத்தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வாலாஜாபாத் பேரூராட்சியில் வாடகை மற்றும் நிரந்தரமாக பலர் குடியேறியுள்ளனர்.
புகார்
தற்போது, வாலாஜாபாத் பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் தேங்காமல் வெளியேற, 1,990ல், பேரூராட்சியில் பல்வேறு தெருக்களில், மழைநீர் வடிகால்வாய் ஏற்படுத்தப்பட்டது.
பேரூராட்சி தெருக்களில் உள்ள அனைத்து வடிகால்வாய்களில் இருந்தும் வெளியேறக்கூடிய தண்ணீர், இறுதியாக வெள்ளேரியம்மன் கோவில் பகுதி ஏரியை சென்றடையும் வகையில், வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த மழைநீர் வடிகால்வாய்கள், தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி, சில இடங்களில் கழிவுநீர் முழுமையாக வெளியேற வசதியின்றி, கால்வாய் பகுதிகளில் நிறைந்து, தெருக்களில் வழியும் நிலை உள்ளது.
இதனால், கொசு உற்பத்தி அதிகரிப்பு, தொற்று நோய் உள்ளிட்ட சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, பேரூராட்சிவாசிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
திட்ட மதிப்பீடு
இவற்றை தடுக்கவும், சுகாதாரத்தை பாதுகாக்கவும், பேரூராட்சிப் பகுதியில், பாதாள சாக்கடை கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, கடந்த 2012ல் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இதையடுத்து, இதற்கான அடுத்த கட்ட பணிகள் துவங்கப்படாமல், இதுவரை கிடப்பில் உள்ளதாக, பேரூராட்சி மக்கள் புகார் தெரிவிக்கின்றர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சியில் வசிப்போர் கூறியதாவது:
அதிக செலவு
வாலாஜாபாத்தில், வலம்புரி வினாயகர் கோவில் தெரு, போஜக்காரத்தெரு, சேர்க்காடு சாலை, பி.கே.செட்டித்தெரு உள்ளிட்ட பல தெருக்களில், கால்வாய்களில் கழிவுநீர் முழுமையாக வெளியேற வழி இல்லாமல், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு தேங்கியுள்ளது.
அவ்வப்போது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டாலும், நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
மேலும், வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவுநீரை, செப்டிக் டேங்க் வாயிலாக தேக்கி வைத்திருப்போர், கழிவுநீர் பிடித்து செல்லும் லாரிகள் வாயிலாக வெளியேற்ற, மாதந்தோறும் அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது.
அதாவது, 15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் தேக்கும் கழிவுநீரை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, லாரி வாயிலாக வெளியேற்ற, ஒரு நடைக்கு 2,500 ரூபாய் வாடகை தர வேண்டி உள்ளது.
இதனால், ஓராண்டுக்கான கழிவுநீரை வெளியேற்ற, 12,500 ரூபாய் வரை செலவிட வேண்டி உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்தால், அச்செலவு தொகை மீதமாகும் என்பதால், வாலாஜாபாத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாலாஜாபாத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்துவது குறித்து, கடந்த 2012ல் பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி, பேரூராட்சி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைத்தோம். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்படாமல் இருந்தது. இதனால், வரிசை அடிப்படையில், பேரூராட்சிகளுக்கான திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் என, கூறப்பட்டது. அதையடுத்து, பாதாள சாக்கடை திட்டம் தற்போது நிலுவையில் உள்ளது.
- சேகர், முன்னாள் தலைவர்,
வாலாஜாபாத் பேரூராட்சி.
மக்கள் தொகை குறைவு
பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வர, பேரூராட்சியில் 50,000த்திற்கும் குறையாமல் மக்கள் தொகை இருக்க வேண்டும். ஆனால், வாலாஜாபாத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால், இத்திட்டம் தற்போது சாத்தியமற்றதாக உள்ளது. எனினும், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு முடிவு செய்வதை தொடர்ந்து, அத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் வாயிலாக, வாலாஜாபாத்தில், மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேக்கம், கழிவுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.
- மாலா, செயல் அலுவலர், வாலாஜாபாத் பேரூராட்சி.