/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரத்து அதிகரிப்பால் தர்பூசணி விலை வீழ்ச்சி
/
வரத்து அதிகரிப்பால் தர்பூசணி விலை வீழ்ச்சி
ADDED : ஏப் 18, 2025 12:57 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையசீவரம், சங்கராபுரம், நத்தாநல்லுார், தேவேரியம்பாக்கம், வில்லிவலம், தாங்கி, சீயமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கிணறு மற்றும் பாலாற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டுள்ளனர்.
கடந்த டிசம்பரில் விதையிட்ட நிலங்களில், பிப்ரவரி முதலும், ஜனவரி மாதம் விதையிட்ட பயிர்கள் மார்ச் மற்றும் தற்போது வரையிலும் தொடர்ந்து அறுவடை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிப்ரவரி இறுதி வரை அறுவடையான பழங்கள் வெளிசந்தையில் ஆயிரம் கிலோ, 8,000 ரூபாய் வரை விலை போனது. ஆனால் தற்போது, ஆயிரம் கிலோ தர்பூசணி பழம், 2,000 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது.
அதையும், உடனுக்குடன் வாங்கி செல்ல வியாபாரிகள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இதனால், பழையசீவரம் உள்ளிட்ட பகுதிகளில், பழத்தை அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அழுகி வீணாகி கால்நடைகளுக்கு தீவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பழையசீவரம் கிராம விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டில், ஆயிரம் கிலோ 10,000 ரூபாய் வரை தர்பூசணி பழங்கள் விலை போனது. இந்த ஆண்டு ஒரேயடியாக விலை சரிந்துள்ளது. இதனால், தர்பூசணி சாகுபடியில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஊசி மூலம் தர்பூசணியில் சிவப்பு சாயம் செலுத்தியதாக அதிகாரி கூறியதன் விளைவால், விலை சரிவு எற்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
அமோக விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாகவும், இத்தகையை விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்லாம் என கருத வேண்டியுள்ளது,
இவ்வாறு அவர்கள் கூறினர்.

