/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பராமரிப்பு பணி எப்போது?
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பராமரிப்பு பணி எப்போது?
ADDED : டிச 17, 2024 10:50 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசிவாக்கம் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ராமலிங்கஸ்வரர் கோவில் உள்ளது.
பழமையான இக்கோவில், தற்போது மிகவும் சிதிலமடைந்து, கருவறை உள்ளிட்ட சில பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கோவில் கூரை மீது செடி, கொடிகள் மற்றும் மரக்கன்றுகள் வளர்ந்து, கோவில் கட்டடம் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது.
பழமையான இக்கோவிலை புனரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என, அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை என, அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, பூசிவாக்கம் கிராமவாசிகள் கூறியதாவது:
ராமலிங்கேஸ்வரர் கோவில் சுற்றுவட்டார மக்களின் புகழ்பெற்ற வழிபாட்டு தலமாக இருந்தது. இக்கோவிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அறநிலையத் துறைக்கு வருவாய் இனமாக இருந்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது. எனினும், கோவில் கட்டட பகுதிகள் ஆபத்தான நிலையில் உள்ளதால், வழிபாட்டுக்கு உள்ளே சென்று வர பக்தர்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
எனவே, பழமை வாய்ந்த இக்கோவிலை தொன்மை மாறாமல் புனரமைத்து வழிபாட்டிற்கு விட, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.