/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை யார், யாருக்கு? குழப்பத்தில் நெசவாளர்கள்
/
மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை யார், யாருக்கு? குழப்பத்தில் நெசவாளர்கள்
மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை யார், யாருக்கு? குழப்பத்தில் நெசவாளர்கள்
மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை யார், யாருக்கு? குழப்பத்தில் நெசவாளர்கள்
ADDED : ஜூலை 26, 2025 09:12 PM
காஞ்சிபுரம்:அறுபது வயதை கடந்த கைத்தறி நெசவாளர்களுக்கு, மாதம் 8,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்குமா அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கா என, நெசவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
--கைத்தறி நெசவாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மத்திய - மாநில அரசுகள், பல்வேறு திட்டங்கள் கொண்டு வருகின்றன.
இருப்பினும், கைத்தறி நெசவாளர்களால், அவர்களது வாழ்க்கை தரத்தை, பொருளாதார அளவில் மேம்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக, வயது முதிர்ந்த மூத்த நெசவாளர்கள், பொருளாதார அளவில் அவதிப்படுகின்றனர். அவ்வாறு, வயதான நெசவாளர்களுக்கு பொருளாதார நெருக்கடியை தவிர்க்க, மாதந்தோறும் 8,000 ரூபாய் வழங்கும் புது திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப் போவதாக, மத்திய அரசின் ஜவுளித்துறை அறிவித்துள்ளது.
லோக்சபாவில், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், 'நாடு முழுதும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள், பணியாளர்களின் நலன்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதில், 'ஆண்டிற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் 8,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என, தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு, தமிழக அரசு 1,200 ரூபாய் மாதந்தோறும் நிதியுதவி அளிக்கிறது. இந்த உதவித்தொகையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என, நெசவாளர்கள் புலம்பி வந்தனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் யார் யாருக்கு கிடைக்கும் என்பதில் குழப்பமடைந்துள்ளனர்.
குழப்பம் இது குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:
மத்திய அரசின் இந்த திட்டம், கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுமா அல்லது தனியார் நெசவாளர்களுக்கும் வழங்கப்படுமா என்ற விரிவான திட்ட அறிக்கை, இன்னும் வெளியாகவில்லை. இதனால், நெசவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம், சேலம், ஆரணி போன்ற ஊர்களில், கைத்தறி நெசவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தனியாரிடமும் பணியாற்றுகின்றனர். அவ்வாறு, தனியாரிடம் பணியாற்றி, 60 வயதை கடந்த நெசவாளர்களுக்கும், இத்திட்டத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும்.
இந்த திட்டம் பற்றி மத்திய அரசின் ஜவுளித்துறை முழு விபரத்தையும் வெளியிட்டு, விரைவாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.