/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு காஞ்சியில் கம்பி தட்டுப்பாடு
/
அரசு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு காஞ்சியில் கம்பி தட்டுப்பாடு
அரசு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு காஞ்சியில் கம்பி தட்டுப்பாடு
அரசு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு காஞ்சியில் கம்பி தட்டுப்பாடு
ADDED : ஆக 03, 2025 12:39 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு, கம்பி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பயனாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
மத்திய அரசு பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பி.எம்., ஜன்மன் மற்றும் மாநில அரசின் கனவு இல்லம், பழங்குடியினத்தவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் இந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநில அரசு திட்டத்தில் தேர்வாகி இருக்கும் பயனாளிகளுக்கு, ஒரு மூட்டை சிமென்ட், 285 ரூபாய்க்கு என, 140 மூட்டை சிமென்ட் மற்றும் 320 கிலோ கம்பி வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கும், அதே விலையில் 100 மூட்டை சிமென்ட் மற்றும் 320 கிலோ கம்பி வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் எம்-.சாண்ட், ஜல்லி ஒரு யூனிட்டிற்கு 1,500 ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், தனியார் சிமென்ட் விற்பனை நிலையங்களில், 300 ரூபாய்க்கு விற்பனையான சிமென்ட், தற்போது 340 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
அரசு சிமென்ட் வழங்குவதில் இருந்த தட்டுப்பாடு, கடந்த மாதம் சரி செய்யப்பட்டது.
தற்போது, காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட சில ஒன்றியங்களில், அரசு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு வழங்க வேண்டிய கம்பிகளுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பயனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், வீடு கட்டும் பயனாளிகள், தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து கம்பி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கம்பி சப்ளை செய்வதற்கு மறு டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்தவர், ஓரிரு நாட்களில் சப்ளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

