/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் டி.ஐ.ஜி., ஆலோசனை; பாதுகாப்பு பணிகளை டில்லி அதிகாரிகள் ஆய்வு
/
குமரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் டி.ஐ.ஜி., ஆலோசனை; பாதுகாப்பு பணிகளை டில்லி அதிகாரிகள் ஆய்வு
குமரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் டி.ஐ.ஜி., ஆலோசனை; பாதுகாப்பு பணிகளை டில்லி அதிகாரிகள் ஆய்வு
குமரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் டி.ஐ.ஜி., ஆலோசனை; பாதுகாப்பு பணிகளை டில்லி அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 28, 2024 09:36 PM
நாகர்கோவில்:மூன்று நாட்கள் தியானம் இருப்பதற்காக பாரத பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை 30ம் தேதி மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு செல்லும் அவர் அங்கு தியானத்தை தொடங்குகிறார்.
அன்று இரவும், மே 31 இரவும் அங்கு தங்கும் அவர் ஜூன் 1 மாலை அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின், ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டில்லி செல்கிறார்.
பிரதமர் தங்குவதற்காக விவேகானந்தர் பாறையில் உள்ள கேந்திர நிர்வாக அதிகாரியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது. விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் அமர்ந்து தியானம் செய்த இடத்தில் மூன்று நாட்கள் பிரதமர் தியானம் மேற்கொள்கிறார்.
இதனால், அவருக்கு தேவையான உணவுகள் அனைத்தும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்படும் சிறப்பு அறையில் தயாரிக்கப்படுகிறது. பத்திரிகையாளர் உட்பட எவருக்கும் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலோசனை
இதனிடையே, திருநெல்வேலி டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் நேற்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன், எஸ்.பி., சுந்தரவதனம், டி.எஸ்.பி., மகேஷ் குமார், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், ஆர்.டி.ஓ., காளீஸ்வரி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
விவேகானந்தர் பாறையில் உள்ள விவேகானந்தர் மண்டபம் கேந்திர நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் சுற்றுப்புறங்கள் அனைத்தும், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது.
பிரதமர் பயணம் செய்ய வேண்டிய படகுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நேற்று முதலே விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.
டில்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.