/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு
/
கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு
ADDED : ஜூலை 09, 2024 12:10 AM
நாகர்கோவில் : கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம், தன் படகுகளில் சுற்றுலா பயணியரை அழைத்துச் செல்கிறது. வழக்கமாக காலை 8:00 மணிக்கு படகு போக்குவரத்து துவங்கி, மாலை 4:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.
கடந்த இரண்டு நாட்களாக, கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. காலை நேரத்தில் கடல்நீர் குறைந்து, பாறைகள் வெளியே தெரிந்தன. காலை 10:00 மணிக்கு பின், நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து, படகு இயக்கும் அளவுக்கு நிலைமை சீராகிறது. அதன் பின், படகு போக்குவரத்து நடக்கிறது.
இந்நிலை நேற்றும் நேற்று முன்தினமும் இருந்தது. இதனால், காலை 8:00 மணிக்கு துவங்க வேண்டிய படகு போக்குவரத்து, காலை 10:00 மணிக்கு பின்னரே துவங்கியது. படகில் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக, அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். பொதுவாக, அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் தான் இது என்று, இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.