ADDED : மே 06, 2024 11:39 PM
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே முக்கடல் எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் அனிஷ், 24. திக்கணங்கோட்டை சேர்ந்தவர் சுபின், 17.
நண்பர்களான இருவரும் தாழக்குடி குளத்தில் குளித்துவிட்டு அனுஷின் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பூதப்பாண்டி அரசு மருத்துவமனை எதிரே பைக் மீது வேன் மோதியதில் இருவரும் இறந்தனர்.
குலசேகரம் அருகே கோதையாறு மின் உற்பத்தி நிலைய ஊழியர் ஹரிபாலன் மகள் அனுக்கிரகா, 18. இவரின் தோழி, கேரள மாநிலம் காட்டாக்கடையை சேர்ந்த ஜான்சி, 17, என்பவருடன் டூ-வீலரில் அஞ்சுகிராமம் அருகே உள்ள கல்லுாரிக்கு சென்று தேர்வு எழுதி திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது வெண்டலிக்கோடு பகுதியில் ரமேஷ், 48, என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் ரமேஷ் இறந்தார். மாணவியர் இருவரும் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
நாகர்கோவில் அருகே புத்தன் துறை செம்பொன் கரையை சேர்ந்தவர் ஜெயா, 52. மகன் கார்த்திக், 20, என்பவருடன், டூ - வீலரில் ஈத்தாமொழி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்ட ஜெயா தலையில் பலத்த காயமடைந்து இறந்தார்.
அதுபோல, கன்னியாகுமரி பாலசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் கோபிநாத், 24. இவர் காவல்கிணறுக்கு டூ - வீலரில் சென்று கொண்டிருந்தபோது குமாரபுரம் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.