/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
'தேவதையை கண்டேன்' பட பாணியில் ஏமாற்றிய காதலி மீது வாலிபர் புகார்
/
'தேவதையை கண்டேன்' பட பாணியில் ஏமாற்றிய காதலி மீது வாலிபர் புகார்
'தேவதையை கண்டேன்' பட பாணியில் ஏமாற்றிய காதலி மீது வாலிபர் புகார்
'தேவதையை கண்டேன்' பட பாணியில் ஏமாற்றிய காதலி மீது வாலிபர் புகார்
ADDED : ஏப் 18, 2025 02:15 AM
நாகர்கோவில்:காதலித்து கைவிட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாகர்கோவிலில் எஸ்.பி., ஸ்டாலினிடம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாலிபர் கொடுத்த புகார் மீது விசாரணை நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், சாமித்தோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 27 வயது வாலிபர், குமரி எஸ்.பி., யிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது:
நான் டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். தற்போது குஜராத் ஆயில் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.
ஒன்பது ஆண்டு காதல்
பிளஸ் 2 படித்தபோது என்னுடன் பயின்ற கொட்டாரத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தேன். கல்லுாரியிலும் இது நீடித்தது. அவளும் என்னை காதலித்தாள். இருவரும் ஒரே சமூகம்; ஒரே மதம் என்பதால், எங்கள் திருமணத்திற்கு தடை இருக்காது என நம்பினேன்.
ஒன்பது ஆண்டுகள் காதல் நீடித்தது. அவளுக்காக என் ஆசைகள், லட்சியங்களை துறந்துள்ளேன். காவல் துறை பணியில் சேர வேண்டும் என்பது சிறுவயது ஆசை.
ஆனால், போலீஸ் வேலை பிடிக்காது என காதலி கூறியதால், அந்த வேலைக்கு தேர்வு எழுதுவதைக்கூட விட்டுவிட்டேன்.
கல்லுாரிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என, அப்பெண் அடிக்கடி பணம் வாங்கினார். இதுவரை 50,000 ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளேன். இரு வெள்ளி மோதிரங்கள், 2 கிராமில் இரண்டு தங்க மோதிரங்கள் கொடுத்துள்ளேன். தற்போது திருமணத்திற்கு மறுக்கும் அவர், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறுகிறார்.
ஆசை வார்த்தை
அவளுக்காக எனக்கு கிடைத்த பல நல்ல வேலைகளை இழந்துள்ளேன். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
நடிகர் தனுஷின், தேவதையை கண்டேன் பட பாணியில் அமைந்துள்ள வாலிபரின் இந்த புகார் குறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையம் வாயிலாக, காதலியிடம் விசாரணை நடத்த, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

