/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
5 வயது சிறுவன் கொலை 'தந்தை'யை தேடும் போலீஸ்
/
5 வயது சிறுவன் கொலை 'தந்தை'யை தேடும் போலீஸ்
ADDED : செப் 03, 2025 11:41 PM
நாகர்கோவில்:இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 5 வயது மகனை கொடூரமாக கொலை செய்த லாரி டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே குமாரபுரம் தோப்பூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் செல்வமதன், 36; லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்த செல்வி, 31, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். செல்விக்கு முதல் கணவர் மூலம் அபினவ், 5, என்ற மகன் இருந்தார்.
செல்வமதனுக்கும், செல்விக்கும் 2 வயதில் வருண் என்ற மகன் உள்ளார். செல்வமதன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால், இரண்டு மாதங்களுக்கு முன் செல்வி பிரிந்து சென்று விட்டார். இரண்டு குழந்தைகளையும் செல்வமதன் பராமரித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வமதன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, அபினவ் இறந்து உடல் அழுகிய நிலையில் கிடந்தார். மற்றொரு மகன் வருண் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
செல்வியின் சகோதரர் நாகராஜன் புகாரின்படி, அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கடந்த ஆக., 31ல் குடி போதையில் வீட்டுக்கு வந்த செல்வமதன், இரண்டு குழந்தைகளையும் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அபினவ் இறந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தலைமறைவான செல்வமதனையும், செல்வியையும் போலீசார் தேடி வருகின்றனர்.