காட்டுவாரியை துார்வாரி ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
காட்டுவாரியை துார்வாரி ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : மே 26, 2026 04:30 AM
குளித்தலை ;சிவாயம் காட்டுவாரியை துார்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை அடுத்த மாயனுார் கதவணையில் இருந்து, பழைய கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் குளித்தலை, இனுங்கூர், நச்சலுார், நெய்தலுார் வழியாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.
மழைக்காலம் மற்றும் தண்ணீர் அதிகமாக செல்லும்போது, வாய்க்காலின் கரை உடைப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் புதுப்பட்டி, வளையப்பட்டி, இனுங்கூர், நச்சலுார், நெய்தலுார் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வளையப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து, சிவாயம் காட்டுவாரி தொடங்கி, பணிக்கம்பட்டி, மேட்டுமருதுார் வழியாக கல்லு பாலத்தில் கொடுங்கால் வடிகால் வாய்க்காலுடன் இணைகிறது. தற்போது சிவாயம் காட்டுவாரி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்தும், விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்ததாலும் வாய்க்கால் குறுகிய அளவாக மாறிவிட்டது, இதனால் மழை நீர் வெளியேற முடியாமல், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, சிவாயம் காட்டுவாரியை துார்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
