/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வறண்ட பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை
/
வறண்ட பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை
ADDED : மார் 11, 2024 01:57 AM
கரூர்,:அமராவதி அணையில் இருந்து, மிக குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு காணப்படுகிறது.
கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு. திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒரு சேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது, கரூர் மாவட்டம், திருமுக்கூடலுார் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது.
அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும். அப்போது கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்லும். அப்போது தடுப்பணை ரம்மியமாக காட்சி அளிக்கும்.
தற்போது, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 16 கன அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 517 கன அடியும், பாசன வாய்க்காலில், 490 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 61.85 அடியாக இருந்தது. கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்த, தண்ணீர் வரத்து நின்றது. இதனால், தண்ணீரின்றி வறண்டு பாறைகளாக தெரிகின்றன.

