/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி அறுவடை தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி அறுவடை தீவிரம்
ADDED : டிச 18, 2024 01:54 AM
கிருஷ்ணராயபுரம், டிச. 18-
கிருஷ்ணராயபுரம் பகுதியில், மரவள்ளி கிழங்கு அறுவடை பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, கோடங்கிப்பட்டி, சரவணபுரம், வயலுார், லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, புனவாசிப்பட்டி, வேப்பங்குடி, கந்தன்குடி, மேட்டுப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம் ஆகிய பகுதிகளில் பரவலாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
மழை பெய்ததால் விளைந்த கிழங்குகளுக்கு, பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதால், விவசாயிகள் அறுவடை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிழங்குக்கு போதுமான விலை இல்லாமல், குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று, 8,500 ரூபாய் விற்றது. தற்போது விலை சரிந்து டன், 5,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் செலவு செய்த தொகைக்கூட எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கூறினர். மேலும் கிழங்குகள் அறுவடை செய்து சேலம், நாமக்கல் பகுதிகளில் செயல்படும் மாவு மில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.