/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் அதிகப்படியான கழிவுநீர்
/
அமராவதி ஆற்றில் அதிகப்படியான கழிவுநீர்
ADDED : மார் 20, 2024 07:15 AM
கரூர் : அமராவதி ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்துக்கு விவசாய பணிகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து செல்லும், 17 கிளை வாய்க்கால்கள் மூலம், ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. மேலும் அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள, 70க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது.
தற்போது கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி நிறைவு பெற்றுள்ள நிலையில், அமராவதி அணையில் இருந்து ஆற்றில், திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளையொட்டி, சாயப்பட்டறைகளில் இருந்தும், கரூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து, திருமாநிலையூர் ராஜ வாய்க்கால், இரட்டை வாய்க்கால் மூலம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், அமராவதி ஆற்றில் அதிகளவில் கலக்கிறது. குறிப்பாக, கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், அதிகளவில் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது.
இதனால் அமராவதி ஆறு தற்போது, கழிவுநீர் ஓடையாக காணப்படுகிறது. அந்த கழிவு நீர் மற்றும் சாயக்கழிவு நீர், திருமுக்கூடலுார் பகுதியில், காவிரியாற்றில் கலந்து மாயனுார் கதவணைக்கும் செல்கிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், குடிநீரும் மாசுபடுகிறது.
எனவே, அமராவதி ஆற்றில் சாயக்கழிவு நீர் மற்றும் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில், கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

