ADDED : மே 02, 2024 07:30 AM
கரூர் : கரூர் அருகே அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், முளைத்துள்ள ஆகாய தாமரை செடிகள், குப்பையை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்தில் சாகுபடிக்காக, விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
தற்போது, சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் களை பறித்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர்- அருகே சின்ன ஆண்டாங்கோவில் சாலையின் குறுக்கே செல்லும் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மேலும், ஆகாய தாமரை செடிகளும் வாய்க்காலில் முளைத்து, படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைப்பட்டுள்ளது.
எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

