/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது
/
கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது
கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது
கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது
ADDED : ஏப் 04, 2024 04:25 AM
கரூர்: ''தமிழகம் முழுதும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், ஐ.டி., விங்க் நிர்வாகிகள் மீது, தி.மு.க., அரசு பொய் வழக்கு போடுகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது. அதை சட்டரீதியாக சந்திப்போம்,''என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசினார்.
கரூர் லோக்சபா தொகுதி பிரசார பொதுக்கூட்டம், மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் தலைமையில், தோரணகல்பட்டியில் நேற்று நடந்தது. கரூர் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசியதாவது:
கரூர் காங்.,- எம்.பி., ஜோதிமணிக்கு, பொதுமக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பு குறித்து பத்திரிக்கைகளில் பார்த்துள்ளேன். அ.தி.மு.க., ஆட்சியின் போதுதான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கரூர் மாவட்டத்தை உருவாக்கினார். முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகால, தி.மு.க., ஆட்சியில் செய்ததை சொல்லி ஓட்டு கேட்கவில்லை.
தி.மு.க., ஆட்சியில், 36 அமாவாசை வீணாகி போய் விட்டது. இன்னும், 24 அமாவாசை போன பிறகு வரும், அ.தி.மு.க., ஆட்சியில் ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும். தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே இல்லை. தமிழகம் முழுதும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், ஐ.டி., விங்க் நிர்வாகிகள் மீது, தி.மு.க., அரசு பொய் வழக்கு போடுகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பொய் வழக்கு போடுவது அதிகமாக உள்ளது. அதை சட்டரீதியாக சந்திப்போம்.
நான் முதல்வராக இருந்த போது, நினைத்திருந்தால் தி.மு.க.,வினர் அனைவரும் பாதுகாப்பாக சிறையில் இருந்து இருப்பர். ஆனால், நாங்கள் அதை செய்யாமல், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு உரிமை தொகை மாதம், 1,000 ரூபாய் என, கூறி விட்டு, முழுமையாக வழங்கவில்லை. 100 நாள் வேலையை, 150 நாளாக உயர்த்தவில்லை. காஸ் சிலிண்டருக்கு மானியம், 100 ரூபாய் வழங்கவில்லை. கல்வி கடன் ரத்து இல்லை. இதனால், 90 சதவீதம் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்.
முறைகேடாக நடக்கும் பார்களில், கள்ள மது விற்பனை நடக்கிறது. ஊழல் செய்ததால்தான், செந்தில் பாலாஜியை செயல் வீரர் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். செந்தில் பாலாஜி இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார். விவசாயம் குறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது.
தி.மு.க., அயலக அணி பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக், போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார். 2,000 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த, மூன்றாண்டுகளில் போதை பொருட்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அந்த ஜாபர் சாதிக், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியுடன் போட்டோ எடுத்துள்ளார். கடந்தாண்டில், அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. கரூரில், பஸ் பாடி கட்டும் தொழில், கொசுவலை தொழில், ஜவுளி தொழில் நசிந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தல் வெற்றி என்பது வரும், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு அச்சாணியாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், தங்கமணி, விஜயபாஸ்கர், சின்னசாமி, முன்னாள் எம்.பி., குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், சந்திரசேகர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அரவை முத்து, முகமது அலி ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

