/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாண்டில் மொபைல் திருடர்கள்: மாணவர்கள் பீதி
/
பஸ் ஸ்டாண்டில் மொபைல் திருடர்கள்: மாணவர்கள் பீதி
ADDED : மே 29, 2024 07:23 AM
கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்டில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவிகளிடம் இருந்து, மொபைல் போன் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், கரூர் பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளது. மேலும், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கரூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளிடம் மொபைல் போன் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை நேரங்களில் திருச்சி, கோவை, ஈரோடு பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பஸ்சில் ஏறும் போது, அவர்களை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள மொபைல்களை திருடி செல்லும் அவலம் நடந்து வருகிறது.பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரில் உள்ள, புறக்காவல் நிலையத்தில் காலை நேரங்களில் போலீசார் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதனால், மொபைல் திருடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, புறக்காவல் நிலையத்தில் நாள்தோறும் போலீசாரை பணியில் நியமித்து, காலை நேரங்களில் கரூர் பஸ் ஸ்டாண்டில், ரோந்து பணியில் ஈடுபட வைப்பது அவசியம்.