ADDED : பிப் 01, 2024 12:13 PM
குளித்தலை அரசு மருத்துவமனை
கட்டடத்தை அகற்ற பொது ஏலம்
குளித்தலை அரசு மாவட்ட மருத்துவமனையில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து அகற்றுவதற்கான பொது ஏலம், நேற்று காலை, 11:00 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. பொதுப்பணித்துறை கட்டட பிரிவு எஸ்.டி.ஓ., சரோஜினி தலைமை வகித்தார். உதவி பொறியாளர் செந்தில்குமார், மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஏலத்தில், 44 ஏலதாரர்கள், 50,000 ரூபாய் செலுத்தி கலந்துகொண்டனர். தொடர்ந்து, அரசு மதிப்பு, 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. இதில், குட்டப்பட்டியை சேர்ந்த வைரமணி, 2 லட்சத்து, 2,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
பிள்ளபாளையம் பஞ்.,ல்
சிறப்பு மருத்துவ முகாம்
பிள்ளபாளையம் பஞ்., பகுதியில் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்.,க்குட்பட்ட காஞ்சிநகர், வல்லம் ஆகிய பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில், காய்ச்சல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை, டாக்டர் பார்த்திபன் வழங்கினார். மேலும், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில், 50க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இதில், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மது விற்ற 9 பேர் கைதுகரூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று வாங்கல், லாலாப்பேட்டை, கரூர் டவுன் பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக, மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக வளர்மதி, 57; மலர்விழி, 52; நீலாமணி, 25; ரவி, 57; வெங்கடேசன், 35; மலர், 43; அன்னகிளி, 55; பரமசிவம், 47; காமராஜ், 40 ஆகிய, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
மாயனுார் அரசுப்பள்ளி சாலையில்
கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
மாயனுார் அரசு தொடக்கப்பள்ளி சாலையோர பகுதியில் செல்லும் சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் அரசு தொடக்கப்பள்ளி வளாகம், வெளிப்புறம் சாலையோரம் சாக்கடை கழிவுநீர் கால்வாய் செல்கிறது. கடந்த சில மாதங்களாக, இந்த சாக்கடை கால்வாயை துார் வாராததால் குப்பைகள் அடைத்து, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிரம்பி வழிகிறது. இதனால், கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பெறும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாயை துார்வார, தேவையான நடவடிக்கையை பஞ்.,
நிர்வாகம் எடுக்க வேண்டும்.
மாவட்ட உரிமையியல் நீதிமன்ற
முதன்மை நீதிபதி வருடாந்திர ஆய்வு
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு வருடாந்திர ஆய்வுப்பணி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். சார்பு நீதிபதி சண்முககனி, உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நடுவர் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, வக்கீல் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரத்திற்கு தேநீர் உபசரிப்பு விழா நடந்தது. வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன், பொருளாளர் தமிழ்ச்செல்வம், அரசு வக்கீல் நீலமேகம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
தொடர்ந்து, மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், வக்கீல் சங்கத்தில் உள்ள நிறை, குறைகள், வக்கீல்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதன்பின், வக்கீல்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என, முதன்மை நீதிபதி உறுதியளித்தார்.
இதில், வக்கீல் சங்க பொறுப்பாளர்கள், மூத்த வக்கீல்கள், இளைய வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
சேதம் அடையும் நிலையில்
மாவட்ட வள மைய கட்டடம்
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட, மாவட்ட வள மைய கட்டடம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. அக்கட்டடம் சேதம் அடையும் நிலையில் உள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 2021-22 நிதியாண்டில், 50 லட்சம் ரூபாய் செலவில், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வள மைய புதிய கட்டடம் கட்டப்பட்டது.
ஆனால், புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், பல மாதங்களாக பூட்டப் பட்டுள்ளது. புதிய கட்டடத்தை சுற்றி செடி, கொடி முளைத்து முட்புதராக மாறி
யுள்ளது. கட்டடத்தின் ஸ்திர தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டு, சேதம் அடையும் நிலையில் உள்ளது. எனவே, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திறக்கப் படாமல் உள்ள, மாவட்ட வள மைய கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கரூரில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் (அன் ஸ்கில்டு) சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில், செல்லாண்டிப்பாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 41 மாத பணிக்காலத்தை, ஓய்வுக்கு பின் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில், அரசாணை வெளியிட
வேண்டும்.
சாலை பணியாளர் பணியிடத்தை, திறன்மிகு இல்லா பணியாளர் என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள, 8,000 சாலை பணியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்
பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் சங்கு ஊதியும், நெற்றியில் நாமம் போட்டும் பங்கேற்றனர்.
பெட்ரோல் பங்க்
ஜெனரேட்டரில் தீ
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்ககல்பட்டி பகுதியில், தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று, மின் தடை ஏற்பட்டதால், பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள, ஜெனரேட்டரை ஊழியர்கள் ஸ்டார்ட் செய்தனர்.
சிறிது நேரத்தில், ஜெனரேட்டரில் தீ பிடித்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயை
உடனடியாக அணைத்தனர். அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
குளத்தில் உள்ள சீமைக்கருவேல
மரங்களை அகற்ற பொது ஏலம்
குளித்தலை ஆர்.டி.ஓ., வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அரியாறு பாசன பிரிவு அலுவலகத்தில், கழுகூரில், 300க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் சீமைக் கருவேல மரங்களை அடியுடன் அகற்ற, பொது ஏலம் விடப்
பட்டது.
எஸ்.டி.ஓ., ஜோதி தலைமை வகித்தார். உதவி பொறியாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். இந்த ஏலத்தில், அரசின் மதிப்பு, 13.40 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. 50க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் கலந்துகொண்டனர்.
கழுகூர் கிராமத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர், அதிக தொகையான, 13.55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு இந்த குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, 90,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.