ADDED : பிப் 22, 2024 07:29 AM
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சேலம் மண்டல தொழிற்
பயிற்சி நிலையங்களுக்கான, மண்டல அளவிலான விளையாட்டு போட்டி, நேற்று நடந்தது. கலெக்டர் உமா துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.
வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில், சேலம் மண்டலத்தில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 11 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என, மொத்தம், 21 தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும், 519க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்ட மண்டல அளவிலான விளையாட்டு போட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நேற்று நடந்தது.
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான மண்டல அளவிலான கைப்பந்து, கால்பந்து, இறகுபந்து, 100 மீ., 200 மீ., 400 மீ., மற்றும் 800 மீ., ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில், 13 விளையாட்டு போட்டிகளும், பெண்கள் பிரிவில், 9 விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
முதற்கட்டமாக, இப்போட்டிகள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களிலேயே நடத்தப்பட்டன.
அதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் ராஜகோபாலன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக இணை இயக்குனர் பார்த்திபன், நாமக்கல் அரசு தொழிற்
பயிற்சி நிலைய முதல்வர் ஈஸ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, அரசுத்துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள்
உட்பட பலர் பங்கேற்றனர்.