/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரும்பு கொள்முதலுக்கு கூடுதல் விலை வழங்க கோரிக்கை
/
கரும்பு கொள்முதலுக்கு கூடுதல் விலை வழங்க கோரிக்கை
ADDED : ஜன 03, 2026 07:59 AM
பள்ளிப்பாளையம்: 'பொங்கல் கரும்பு கொள்முதலுக்கு, கூடுதல் விலை வழங்க வேண்டும்' என, சமயசங்கிலி கரும்பு விவசாயிகள், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி, களியனுார், கரமேடு, தொட்டிபாளையம், பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம், களியனுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். ஆண்டுதோறும், பொங்கல் பரிசு தொகுப்புகளில் கரும்பு வழங்க, நாமக்கல் மாவட்ட நிர்வாகம், சமயசங்கிலி பகுதிகளில் இருந்து தான் கரும்புகளை கொள்முதல் செய்கிறது. இந்தாண்டு கரும்பு கொள்முதல் செய்ய, கரும்புகளை ஆய்வு செய்ய, நேற்று மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி, சமய சங்கிலி பகுதிக்கு வந்தார். அப்போது, கரும்பு விவசாயிகள், பொங்கல் கொள்முதல் செய்யும் கரும்புக்கு, கூடுதல் விலை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, சமயசங்கிலி பகுதி கரும்பு விவசாயி ஸ்ரீதர் கூறியதாவது:கடந்தாண்டு, ஒரு கரும்புக்கு, 23 ரூபாய் வழங்கினர். மீதமுள்ள, 12 ரூபாய், வண்டி வாடகை, ஆள் கூலி என, அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இந்தாண்டு அரசு சார்பில், ஒரு கரும்பிற்கு, 38 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும், 23 ரூபாய் தந்தால் நஷ்டம் தான் ஏற்படும். கரும்பு சாகுபடி செலவு அதிகரித்து விட்டது. ஒரு கரும்புக்கு, 28 ரூபாய் தந்தால் தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். இல்லையெனில் நஷ்டம் தான் ஏற்படும். கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு விவசாயி கூட விடுபடக்கூடாதுபொங்கலுக்கு கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை, மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, நேற்று ஆய்வு செய்தார். அப்போது, எந்த ஒரு விவசாயிகளும் விடுபடக்கூடாது; எல்லா விவசாயிகளிடமும் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என, தெரிவித்தார். தொடர்ந்து, வேளாண்மைத்துறை சார்பில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், சமயசங்கிலி பகுதியை சேர்ந்த விவசாயி ஜீவிதா என்பவர், 0.57 ஹெக்டேர் பரப்பளவில், 73,068 ரூபாய -மானியத்தில் கரும்பும், தோட்டக்கலைத்துறை சார்பில் பழனிசாமி என்பவர், 1.21 ஹெக்டேர் பரப்பளவில், 1,60,760 ரூபாய் மானியத்தில் மஞ்சளும், சாகுபடி செய்து வருவதை ஆய்வு செய்தார்.

