/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் 1,000 டன் கொசுவலை தேங்கும் நிலை; குவியும் இறக்குமதியை கட்டுப்படுத்த கோரிக்கை
/
கரூரில் 1,000 டன் கொசுவலை தேங்கும் நிலை; குவியும் இறக்குமதியை கட்டுப்படுத்த கோரிக்கை
கரூரில் 1,000 டன் கொசுவலை தேங்கும் நிலை; குவியும் இறக்குமதியை கட்டுப்படுத்த கோரிக்கை
கரூரில் 1,000 டன் கொசுவலை தேங்கும் நிலை; குவியும் இறக்குமதியை கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : டிச 31, 2024 07:43 AM
கரூர்: இந்தியாவில் கொசுவலை இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கா விட்டால், கரூரில் தேங்கியுள்ள, 1,000 டன் கொசு வலையால், 25 கோடி ரூபாய் உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூரில் ஜவுளி தொழிலுக்கு அடுத்தபடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தர கூடியதாக பாரம்பரிய கொசுவலை உற்பத்தி தொழில் இருந்து வந்தது. இங்கிருந்து, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களுக்கு அதிகளவிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் வரை கரூரில் கொசு வலை மூலம் வர்த்தகம் நடந்தது.
இத்தொழில் நேரிடையாக, 25 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக, 50 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டு களாக தொழிலில் மந்த நிலை ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு தொழில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொசு வலைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கவில்லை என்றால், உள்ளூரில் கொசுவலை உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.குப்புராவ் கூறியதாவது: உள்நாட்டு தொழிலை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், 20 சதவீதம் சுங்கவரி இறக்குமதி செய்யப்படும் கொசுவலைகளுக்கு விதிக்கப்பட்டு வந்தது. 2012ம் ஆண்டு வங்கதேசம், இலங்கை உள்பட சார்க் நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டது. வங்கதேசத்தில் மட்டுமல்லாது சீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து கொசுவலைகள் மிககுறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் உள்நாட்டு கொசுவலை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இப்பிரச்னை குறித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வாயிலாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அடக்கவிலை கிலோ, 3.5 டாலருக்கு குறைவான கொசுவலைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடையிலிருந்து தப்பிக்கும் வகையில், 3.6 டாலராக பில் செய்து இறக்குமதி செய்கின்றனர். அதுமட்டுமல்லாத முறைகேடான வழிகளில், இந்தியாவிற்குள் வெளிநாட்டு கொசுவலை வருகிறது. இதனால், மத்திய அரசு விதித்த கட்டுப்பாடு பயனற்றதாகிவிட்டது.
தைவானில் இருந்து மாதம்தோறும், 450 மெ.டன் கொசுவலை இறக்குமதியாகிறது. வரும், ஜனவரி, பிப்ரவரி மாதம்தான் கொசுவலை விற்பனை சீசன். இதை எதிர்பார்த்து கொசுவலைகளை தயார் செய்து விற்பனைக்கு காத்திருக்கிறோம். எங்களுடைய சரக்குகள் விற்கும் என்ற நிலை உறுதியாக தென்படவில்லை. இனியும் தாமதிக்காமல் உறுதியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை எனில், காலம் காலமாக உற்பத்தி செய்துவரும் கரூர் கொசுவலை உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்த, 1,000 டன் கொசுவலைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். கிலோ 250 ரூபாய் வீதம், 1,000 டன்னுக்கு, 25 கோடி ரூபாய் உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படும். இதனால், வெளிநாடுகளிருந்து இருந்து கொசுவலை இறக்குமதி செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும் அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர், கூறினார்.