ADDED : செப் 13, 2025 01:52 AM
கரூர், கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், மூலக்காட்டானுார் பகுதிக்குட்பட்ட போக்குவரத்து நகர், அமராவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு வாசிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், கரூர்- -திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள காந்திகிராமம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
கட்டளை காவிரி ஆற்றில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் நிரப்பி, அங்கிருந்து பொது மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்தது. குடியிருப்புகளும் எண்ணிக்கை அதிகரித்தால், வேறொரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதனால் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. அதில், உள்ள கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில், எப்போதும் வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டி கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.