/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விடை பெறுகிறது ஆடி மாதம் வாழைத்தார்களுக்கு விலை உயர்வு
/
விடை பெறுகிறது ஆடி மாதம் வாழைத்தார்களுக்கு விலை உயர்வு
விடை பெறுகிறது ஆடி மாதம் வாழைத்தார்களுக்கு விலை உயர்வு
விடை பெறுகிறது ஆடி மாதம் வாழைத்தார்களுக்கு விலை உயர்வு
ADDED : ஆக 15, 2025 03:14 AM
கரூர், ஆடி மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், வாழைத்தார்களுக்கு விலை அதிகரித்து வருகிறது. இதனால், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில், வாழை உற்பத்திக்கு கரூர் மாவட்டத்துக்கு தனி மவுசு உண்டு. காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் விளையும் வாழை ரகங்களுக்கு, வெளிமாநிலங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, லாலாப்பேட்டை, மேட்டுமகாதானபுரம், மாயனுார், மேட்டுதிருகாம்புலியூர், பிச்சம்பட்டி, கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், நன்னியூர், வாங்கல், வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக பூவன், ரஸ்தாளி மற்றும் கற்பூர வள்ளி வாழை ரகங்கள் உற்பத்தி, கரூர் மாவட்டத்தில் அதிகம். இங்கிருந்து நாள்தோறும், 75க்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, வாழைத்தார்கள் விற்பனைக்காக பிரித்து அனுப்பப்படுகிறது. 350 ரூபாய் வரை விற்ற பூவன் வாழைத்தார் தற்போது, 450 ரூபாய்க்கும், ரஸ்தாளி, 400 ரூபாயில் இருந்து, 450 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி, 300 ரூபாயில் இருந்து, 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறியதாவது:
ஆடி மாதம் காரணமாக கடந்த, மூன்று வாரங்களாக வாழைத்தார்களை தோட்டத்துக்கு வந்து வாங்கி செல்வதை, வியாபாரிகள் தவிர்த்து வந்தனர். காரணம் சுப விசேஷங்கள் இல்லாததால், வாழைக்கு தேவை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகளே வாழைத்தாரை வெட்டி, மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று, குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். ஆடிப்பெருக்கு, அமாவாசை, ஆடிப்பூரத்தால் சற்று விலை அதிகரித்துள்ளது. வரும், 17ல் ஆவணி மாதம் துவங்குகிறது. தொடர்ந்து கார்த்திகை மாதம் வரை, திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் அதிகளவில் நடக்கும். இதனால், வாழைத்தார்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.