ADDED : பிப் 07, 2024 11:46 AM
கழிவு நீர் வாய்க்காலை
துார்வார வேண்டும்
கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகில்,
கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில்
அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில், கழிவு நீர் வாய்க்காலில், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளது. மழை பெய்யும் போது, மழைநீர் சாலையில் செல்லும் நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, கழிவு நீர் வாய்க்காலை துார்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும்.
குப்பை எரிப்பதை தடுக்க
நடவடிக்கை தேவை
கரூர் அருகே, வாங்கல்- நாமக்கல் மோகனுார் சாலையில்
பொதுமக்கள், குப்பை கொட்டி வருகின்றனர். இதன் மீது சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால், மோகனுார் சாலை நாள்தோறும் புகை மண்டலமாக உள்ளது. அப்பகுதியில், வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை
மருத்துவமனை, ரேஷன் கடை மற்றும் வீடுகள் உள்ளது. மேலும்,
அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதை பஞ்சாயத்து
நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், வாங்கல்-மோகனுார் சாலையில், புகை மூட்டத்தால் போக்குவரத்து நெரிசலுடன்,
வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் எரிச்சலும் ஏற்படுகிறது.
மண் குவியலை அகற்ற
மக்கள் வேண்டுகோள்
காந்தி கிராமம் வழியாக நாள்தோறும், ஏராளமான பஸ், லாரிகள், கார்கள் சென்று வருகின்றன. சாலையில் மணல் தேங்கியிருப்பதால், வாகனங்கள் செல்லும் போது, மணல் பறக்கிறது. வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, டூவீலர்களில் செல்பவர்கள், இரவு நேரங்களில் கீழே விழுகின்றனர். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள், அதிவேகத்தில் செல்கிறது. இதனால், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, கரூர்- திருச்சி சாலை, காந்தி கிராமம் பகுதியில் தேங்கிய மணலை அப்புறப்படுத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

