/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரியில் ஓட காத்திருக்கும் 3 அணைகளின் தண்ணீர்: மகிழ்ச்சியுடன் விவசாய பணிகள் துவக்கம்
/
காவிரியில் ஓட காத்திருக்கும் 3 அணைகளின் தண்ணீர்: மகிழ்ச்சியுடன் விவசாய பணிகள் துவக்கம்
காவிரியில் ஓட காத்திருக்கும் 3 அணைகளின் தண்ணீர்: மகிழ்ச்சியுடன் விவசாய பணிகள் துவக்கம்
காவிரியில் ஓட காத்திருக்கும் 3 அணைகளின் தண்ணீர்: மகிழ்ச்சியுடன் விவசாய பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 05, 2025 01:35 AM
கரூர், காவிரியாற்றில், மூன்று அணைகளின் தண்ணீர் கரைபுரண்டு ஓட காத்திருக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள், மகிழ்ச்சியுடன் பணிகளை துவக்கியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், கடந்தாண்டு வட கிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்தது. வழக்கமாக, மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். நடப்பாண்டு கடந்த, மே மாதம் இறுதியில் மழை தொடங்கியது. நடப்பாண்டு கடந்த மாதம் ஜூன், 12ல் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு, 24 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு, தென்மேற்கு பருவ மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு, 484 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், கரூர் மாவட்டம், கட்டளை மற்றும் மணவாசி பகுதி களில் காவிரியாற்றில் கலக்கும். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது வினாடிக்கு, 1,250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், பவானி கூடுதுறை என்ற இடத்தில், காவிரியாற்றில் கலக்கும். மேலும், கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றின் தண்ணீர், கரூர் அருகே நொய்யல் பகுதியில் காவிரியாற்றில் கலக்கும்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக, கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், அமராவதி அணை மற்றும் பவானிசாகர் அணைகளின் தண்ணீர் இன்னும், ஒரு சில நாட்களில், காவிரியாற்றில் கரை புரண்டு ஓட போகிறது.
இதனால், கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் விவசாயிகள், சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர்.
குறிப்பாக புகளூரில் வெற்றிலை, நெரூரில் கோரைபுல், நெல், கரும்பு, லாலாப்பேட்டை, குளித்தலையில் வாழை, வெற்றிலை, ஆண்டாங்கோவில் பகுதியில் மஞ்சள் சாகுபடி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதை தவிர, எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.