/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அப்பிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
/
அப்பிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
ADDED : டிச 06, 2025 03:01 AM

கரூர்: கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அப்பிப்பாளையம் பிரிவு உள்ளது. கரூர் நகர பகுதியில் இருந்து சுக்காலியூர், செட்டிப்பாளையம், கருப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல, மதுரை தேசிய நெடுஞ் சாலையை கடந்து செல்ல வேண்டும்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள், கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்து நடக்கிறது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது, அப்பிப்பாளையம் பிரிவில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது, வாகன பெருக்கம் அதிகரித்து விட்டதால், அப்பிப்பாளையம் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை தேசிய நெடுஞ்சாலையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், விபத்துகளை தடுக்க அப்பிப்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

