/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - சென்னை பகல் நேர ரயில் இயக்கப்படுமா?
/
கரூர் - சென்னை பகல் நேர ரயில் இயக்கப்படுமா?
ADDED : ஜன 15, 2024 10:36 AM
கரூர்: 'கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும்' என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நுழைவு வாயிலாக கரூர் உள்ளது. இங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில், 48 எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்கின்றன.
அதில், 24 ரயில்கள் நாள்தோறும் நின்று செல்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கரூர் வழியாகத்தான் ரயில்கள் சென்று வருகின்றன.
மேலும், கரூரில் பஸ் பாடி கட்டும் தொழில், ஜவுளி தொழில் மற்றும் கொசுவலை உற்பத்தி தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தொழில் நிமித்தம் காரணமாக, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கரூர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மங்களூர் - சென்னை, பாலக்கோடு - சென்னை எழும்பூர்- பழநி வரை, கரூர் வழியாக, இரவு நேரத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கரூரில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்கள் இல்லை. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல சேலம், ஈரோடு, திருச்சி போக வேண்டிய நிலை உள்ளது.
இதனால், கரூரில் இருந்து சேலம் அல்லது திருச்சி வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், பகல் நேர ரயில் இயக்கப்படுவது கிடப்பில் உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கரூரில் சென்னைக்கு இரவு, 8:00 மணிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், 9:00 மணிக்கு பாலக்கோட்டில் இருந்து கரூர் வழியாக, சென்னை சென்ட்ரலுக்கு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது.
இதில், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் வழியாக சென்னைக்கு இயக்கப்படுகிறது. இதில், கரூர் பயணிகளுக்கு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. கேரளா மாநிலம் பாலக்கோட்டில் இருந்து இயக்கப்படும் ரயிலிலும், இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி கட்டும் நிறுவனங்கள் அதிகமுள்ள, கரூரில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் இயக்க, வரும் மத்திய இடைக்கால பொது பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானால், அனைவருக்கும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.