/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எங்க நிலையை நேரில் பாருங்க... கலெக்டரிடம் கதறிய இருளர்கள்
/
எங்க நிலையை நேரில் பாருங்க... கலெக்டரிடம் கதறிய இருளர்கள்
எங்க நிலையை நேரில் பாருங்க... கலெக்டரிடம் கதறிய இருளர்கள்
எங்க நிலையை நேரில் பாருங்க... கலெக்டரிடம் கதறிய இருளர்கள்
ADDED : ஜூலை 02, 2024 05:18 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காளியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், காமாட்சிபுரம், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, இருளர் இன மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
அப்போது, நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
மிகவும் ஏழ்மை நிலையில், விறகு வெட்டி வாழ்கிறோம், எங்களுக்கு, 1989ல், 35 தொகுப்பு வீடுகளை, அரசு கட்டி கொடுத்தது. இப்போது 100 ஆக உயர்ந்துள்ளது. அதில், 55க்கும் மேற்பட்ட வீடுகள் சிதிலமடைந்தும் கூரை, சுவர்கள் இடிந்து, அபாய நிலையில் உள்ளன. பலமுறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதை அறிந்த பர்கூர் பி.டி.ஓ., கலா மற்றும் அதிகாரிகள், இருளர் இன மக்களிடம் பேச்சு நடத்தினர். கலெக்டரை நேரடியாக சந்திக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
எனவே, வேறு வழியின்றி அவர்களை, போலீசார் அனுமதித்தனர்; கலெக்டர் சரயுவை அவர்கள் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், 'எங்கள் வீடுகளின் நிலையை நேரில் வந்து பாருங்கள்... எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை. வீடுகளில் துாங்க முடியாமல், இரவில் அருகிலுள்ள பள்ளியில் துாங்குகிறோம்' எனக் கூறி அழுதனர்.
அவர்களிடம் பேசிய கலெக்டர் சரயு, “அந்த வீடுகளை சரிசெய்ய அரசிடம் ஒப்புதல் வந்துள்ளது. பல வீடுகள் சரிசெய்ய முடியாத நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் வீடுகளை நேரில் வந்து பார்க்கிறேன். அதன் பின், வீடுகளை சரிசெய்ய முடியுமா அல்லது புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டுமா என, அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்,” எனக் கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.