/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் வரை மெட்ரோ ரயில் எதிர்த்து எல்லையில் மறியல்
/
ஓசூர் வரை மெட்ரோ ரயில் எதிர்த்து எல்லையில் மறியல்
ADDED : செப் 01, 2024 01:52 AM

ஓசூர்: கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வழியாக, தமிழக எல்லையான ஓசூர் வரை, மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகே, மறியல் போராட்டம் நேற்று மதியம் நடந்தது.
கன்னட சலுவளி, கன்னட ஜாக்ருதி வேதிகே, கன்னட கடிநாடு வேதிகே அமைப்புகள் சார்பில், அதன் தலைவர்கள் முறையே வாட்டாள் நாகராஜ், மஞ்சுநாத் தேவா, சோனி நாகராஜ் தலைமை வகித்தனர். இதில் பங்கேற்ற, 50க்கும் மேற்பட்டோரை கர்நாடகா மாநில போலீசார் கைது செய்தனர்.
வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:
ஓசூரை, கர்நாடகாவுடன் இணைக்கும் வரை, மெட்ரோ ரயில் பாதை அமைப்பதை அனுமதிக்க மாட்டோம். மீறி அமைத்தால், கர்நாடகா முழுதும் போராட்டம் நடத்தப்படும்.
ஓசூர், ஊட்டி, தாளவாடியை கர்நாடகாவுடன் இணைக்க, 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மேகதாது அணையால் தமிழகமும் பயன்பெறும். மேகதாது விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.