/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.05 கோடி கேட்டு தாய், மகன் கடத்தல்
/
ரூ.1.05 கோடி கேட்டு தாய், மகன் கடத்தல்
ADDED : ஆக 20, 2024 04:53 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி, ஆசாத் நகரை சேர்ந்த சேகர் மனைவி தேவி, 55. இவரது மகன் சசிக்குமார், 35, ஆன்லைன் டிரேடிங் ஏஜன்சி நடத்துகிறார். இவர் தனக்கு நன்கு பழக்கமான திருமால், 48, ராஜேந்திரன், 40, முனுசாமி, 35, ஆகியோரிடம் கடந்த 2021ல், 'ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிகளவு வட்டி கிடைக்கும்' என கூறினார்.
அதை நம்பிய மூவரும், தங்களது பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் பெற்ற கடன் தொகை என மொத்தம், 1.05 கோடி ரூபாயை, சசிக்குமாரிடம் முதலீடு செய்தனர். சில மாதங்கள் வரை வட்டி கிடைத்தது.
மூன்று பேர் கொடுத்த பணத்தை, பிட்காயினில் முதலீடு செய்திருந்த சசிக்குமார், ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்தார்.
கடந்த, மூன்று ஆண்டுகளாக பணத்தை கேட்டும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த மூவரும், நேற்று முன்தினம் காலை, சசிக்குமார், அவரது தாய் தேவி ஆகியோரை, கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு காரில் கடத்தினர்.
பின், சசிக்குமாரின் தம்பி வசந்தகுமாருக்கு போன் செய்து, 1.05 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.
அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கூறிய வசந்தகுமார், அண்ணன் சசிக்குமார் வங்கி கணக்கிற்கு, 1 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதை அந்த மூவரும் எடுத்துக் கொண்டனர். மகன் மற்றும் மனைவி கடத்தப்பட்டது குறித்து சேகர், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படையினர் விசாரணையில், பெங்களூருவில் அவர்கள் பதுங்கியிருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், சசிக்குமார் மற்றும் அவரது தாய் தேவியை நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மீட்டனர்.
தலைமறைவான, திருமால், ராஜேந்திரனை நேற்று கைது செய்த, போலீசார் தலைமறைவான முனுசாமியை தேடுகின்றனர்.

