/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குட்டையில் விழுந்த மாணவன் மீட்க முயன்ற ஆசிரியருடன் பலி
/
குட்டையில் விழுந்த மாணவன் மீட்க முயன்ற ஆசிரியருடன் பலி
குட்டையில் விழுந்த மாணவன் மீட்க முயன்ற ஆசிரியருடன் பலி
குட்டையில் விழுந்த மாணவன் மீட்க முயன்ற ஆசிரியருடன் பலி
ADDED : மார் 06, 2025 01:38 AM

ஓசூர்:பாகலுார் அருகே, விவசாய குட்டையில் மூழ்கிய மாணவன், அவனை காப்பாற்ற முயன்ற தலைமையாசிரியர் என, இருவரும் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே எழுவப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 30 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
ஓசூர் சப்தகிரி நகரில் வசிக்கும், கூஸ்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கவுரிசங்கர் ராஜு, 53, பள்ளி தலைமையாசிரியராக இருந்தார். எழுவப்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் மகன் நித்தீன், 8, மூன்றாம் வகுப்பு படித்தார்.
நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி பின்புறம், 50 மீட்டர் துாரத்தில் உள்ள வெங்கடேஷ் என்பவரது விவசாய நிலத்துக்கு மாணவர் சென்றார்.
அங்கு பெரிய பள்ளம் தோண்டி, தார்ப்பாயை விரித்து குட்டைபோல் விவசாயத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த நீரை பார்க்க ஏறிய மாணவன் நிலை தடுமாறி விழுந்தான்.
இதை பார்த்துக் கொண்டிருந்த அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நித்தீனின் தம்பி நுாத்தன், 6, தலைமையாசிரியர் கவுரிசங்கர் ராஜுவிடம் ஓடிச் சென்று கூறினான். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரும், சாப்பாட்டை வைத்து விட்டு அங்கு ஓடினார்;
நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நித்தீனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் நீரில் மூழ்கி விட்டார். இருவரும் மூச்சுத்திணறி பலியாகினர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் இருவரது சடலங்களை மீட்டனர்.
விவசாய குட்டையில் மூழ்கி பலியான தலைமையாசிரியர் கவுரிசங்கர் ராஜூ, மூன்று மாதங்களுக்கு முன் தான், இப்பள்ளிக்கு மாறுதலாகி வந்தார். அவரது மனைவி ஸ்ரீஷா, சென்னசந்திரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். விபத்து குறித்து, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாய குட்டையில் மூழ்கி பலியான மாணவன், தலைமை ஆசிரியர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், மாணவன் நித்தீன், தலைமையாசிரியர் கவுரிசங்கர் ராஜு குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாயை, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.