ADDED : மே 11, 2025 01:44 AM
ஓசூர், ஓசூர், பாகலுார் மற்றும் கெலமங்கலம் அருகே நடந்த சாலை விபத்துகளில், 3 பேர் உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜகணபதி நகரில் வசித்து வந்தவர் அஜித், 27. கடந்த, 8 ம் தேதி இரவு, 11:45 மணிக்கு, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றார்.
பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், வசந்த் நகர் பிரிவு ரோடு அருகே சென்ற போது, பைக்குடன் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் உயிரிழந்தார். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மொஜிபூர் ரஹ்மான், 50. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் கோட்டை பகுதியில் தங்கியிருந்து, கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 8 ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, பாகலுாரில் உள்ள ஓசூர் சாலையில் நடந்து சென்றார்.
தேன்மொழி ஓட்டல் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த மொஜிபூர் ரஹ்மான், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 49. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, கெலமங்கலம் அடுத்த இருதாளம் பஸ் ஸ்டாப் அருகே டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பாடி கட்டாத புதிய வாகனம், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.