/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் மாணவர்கள் உலக பூமி தின விழிப்புணர்வு
/
வேளாண் மாணவர்கள் உலக பூமி தின விழிப்புணர்வு
ADDED : ஏப் 24, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வாணவராயர் வேளாண் கல்லுாரியில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி, காவேரிப்பட்டணம் அடுத்த கால்வேஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில், வேளாண் கல்லுாரி மாணவர்கள், உலக பூமி தினத்தை பற்றியும், பூமி வெப்பமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், இயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை காத்தல், இயற்கை விவசாயம் போன்றவை குறித்தும், மாணவ, மாணவியர் கற்கவேண்டிய நல்ல பழக்க, வழக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், கோடைவெயில் காலத்தில், நாம் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள், தினமும் தண்ணீர் குடிப்பதன் அவசியம், மரக்கன்றுகளை நட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினர். பின்னர், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியருடன் சேர்ந்து, மரக்கன்றுகளை நட்டு
வைத்தனர்.