ADDED : ஜன 02, 2024 12:15 PM
ஓசூர்: ஓசூர் அருகே, ஒற்றை ஆண் யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில், ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. உணவு மற்றும் நீருக்காக தினமும் வனத்தை விட்டு வெளியேறும் யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகிறது. குறிப்பாக, பென்னிக்கல், கொம்பேப்பள்ளி, பீர்ஜேப்பள்ளியில் பயிர்கள் தினமும் சேதமாவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, பீர்ஜேப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, அங்கு சாகுபடி செய்திருந்த ராகி, வெள்ளரி, கொத்தமல்லி பயிர்களை சேதப்படுத்தியது. பின் நேற்று காலை மீண்டும் வனத்துக்கு சென்றது. சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

