/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாலியல் சீண்டல்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: அமைச்சர் மகேஷ்
/
பாலியல் சீண்டல்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: அமைச்சர் மகேஷ்
பாலியல் சீண்டல்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: அமைச்சர் மகேஷ்
பாலியல் சீண்டல்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: அமைச்சர் மகேஷ்
ADDED : செப் 07, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, “பள்ளி மாணவ, மாணவியருக்கு நடக்கும் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்,” என, அமைச்சர் மகேஷ் பேசினார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில், தனியார் பள்ளி
கள் இயக்ககம் சார்பில், தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
கருத்தரங்கை துவக்கி வைத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது: வாழ்வில் எவ்வளவு பெரிய துறைகளில் சாதித்தாலும், அவர்களுக்கு கல்வியே அடித்தளம். அரசு, தனியார் பள்ளிகள் கவனத்தோடு செயல்பட்டாலும், அவ்வப்போது பாலியல் புகார் குறித்து வெளிவரும் செய்திகள், வெட்கி தலை குனிய வைத்துள்ளன.
நவீன காலத்தில் நாகரிகம், பண்பாடு வளர்ந்திருந்தாலும், அதே போர்வையில் சில மிருகங்களும் உலா வருகின்றன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் உள்பட யார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலும், பள்ளிகள் தங்கள் பெயர் கெட்டுவிடும் என அதை மறைக்காமல், உடனடியாக போலீசார், குழந்தைகள் நலத்துறையிடம் புகார் அளியுங்கள்.
பள்ளிகள் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டாலும், அதையும் மீறி அவ்வப்போது மாணவ, மாணவியருக்கு பாலியல் சீண்டல் குற்றங்கள் நடக்கின்றன. அதை எதிர்கொள்வது குறித்து இன்று நாள் முழுவதும் போலீசார், வக்கீல், டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள் என பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். அதை பள்ளி நிர்வாகம் கடைபிடித்து, பாலியல் சீண்டல்களுக்கு எதிராக அனைத்து தரப்பினருடன் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு பேசினார்.
கருத்தரங்கில், உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ், மருத்துவக் கல்லுாரி முதல்வர் சத்ய
பாமா, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் சுகன்யா மற்றும் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
'போக்சோ சட்டத்தில்
திருத்தம் தேவையில்லை'
“போக்சோ சட்டத்தில் திருத்தம் தேவையில்லை, அதை சரியாக கையாண்டாலே பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்,” என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
கிருஷ்ணகிரியில், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் மலை கிராமங்கள் மிகுந்த பகுதி. இங்கு பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை பிரச்னை அதிகமாக இருந்ததால், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியுள்ளோம். போக்சோ சட்டம் குறித்து அனைவருக்கும் புரிந்துணர்வு வேண்டும். அது தவறாகவும் பயன்படுத்தக் கூடாது. ஏற்கனவே, போக்சோ சட்டத்தில் கடுமையான நடைமுறைகள் உள்ளன. போலியாக புகார் அளிப்பவர்களிடம், போக்சோ சட்டத்தை முறையாக கையாண்டாலே அந்த புகார் குறித்து தெரியவரும். அதற்காக போக்சோ சட்டத்தில் திருத்தம் தேவையில்லை. இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கவுள்ள இடத்தை, அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார். அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் உடனிருந்தனர். அதேபோல, ஓசூரில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் இடங்களை, அமைச்சர்
சக்கரபாணி ஆய்வு செய்தார்