/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்திற்கு இடையூறு தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்
/
மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்திற்கு இடையூறு தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்
மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்திற்கு இடையூறு தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்
மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்திற்கு இடையூறு தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்
ADDED : அக் 09, 2025 01:53 AM
ஓசூர், :ஓசூரில், மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையம் முன், காரை நிறுத்தி இடையூறு செய்யும், தி.மு.க., நிர்வாகி மீது, நடவடிக்கை எடுக்க, போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுார் அருகே, லட்சுமி நரசிம்மர் நகர், 2வது குறுக்கு தெருவில், தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில், தனியார் கட்டடத்தில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல், ஆரி ஒர்க், எம்ராய்டரி ஒர்க் போன்றவை,
கடந்த மே மாதம் முதல் இலவசமாக கற்று தரப்படுகிறது. மையத்தின் வாசலில், அப்பகுதியில் வசிக்கும், தி.மு.க., - முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், மாவட்ட பிரதிநிதியுமான ரமேஷ், அவரது காரை நிறுத்தி வருகிறார் என்றும், அதனால் மாற்றுத்திறனாளிகள், மையத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறி, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோருக்கு, தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் மூலமாக புகார் அளிக்கப் பட்டது.ஆனால், ரமேஷ், தி.மு.க., நிர்வாகி என்பதால், மத்திகிரி போலீசாரும், விசாரித்து நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும், விசாரணைக்கு சென்ற எஸ்.ஐ., ஒருவரிடமும், 'எங்கள் காரை எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவோம்' என வாக்குவாதம் செய்து, ரமேஷ் குடும்பத்தினர் அனுப்பி விட்டதாகவும், தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியிடம் பிரச்னை வேண்டாம் என நினைத்து, போலீசாரும் இப்பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. அதனால், டி.ஜி.பி.,யிடம் புகார் கொடுத்து, அவரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சென்னை தலைமை செயலகம் முன்பு, போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆயத்தமாகி வருகிறது.
இது குறித்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷிடம் கேட்டபோது, ''15 ஆண்டுகளாக அப்பகுதியில்தான், காரை நிறுத்தி வருகிறேன். மையம் செயல்படும் கட்டட உரிமையாளர் துாண்டுதல் பேரில் தான், தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் புகார் கொடுத்துள்ளது. மத்திகிரி இன்ஸ்பெக்டர் கூறியவுடன், காரை தள்ளி தான் நிறுத்தி வருகிறோம். இப்போது, கட்டட உரிமையாளர் தான், என் காருக்கு முன்பாக வாகனத்தை நிறுத்தி வருகிறார்,'' என்றார்.