/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேட்பு மனுவை வாபஸ் பெற சொன்னதால் பெண் தீக்குளிப்பு
/
வேட்பு மனுவை வாபஸ் பெற சொன்னதால் பெண் தீக்குளிப்பு
வேட்பு மனுவை வாபஸ் பெற சொன்னதால் பெண் தீக்குளிப்பு
வேட்பு மனுவை வாபஸ் பெற சொன்னதால் பெண் தீக்குளிப்பு
ADDED : அக் 02, 2011 12:04 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பெண்ணிடம், மனுவை வாபஸ் பெற கோரி உறவினர்கள் வற்புறுத்தியதால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.
ஊத்தங்கரை அடுத்த ஆனந்தூர் பஞ்சாயத்து செங்கம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிவக்குமார். இவரது மனைவி சவுந்தரி (26). இவர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதே வார்டில் சவுந்தரிக்கு அக்கா முறையான மூக்கம்மாள் என்பவரும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து, வேட்பு மனு தாக்கல் செய்த இருவரில் ஒருவர் மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும், அதன் மூலம் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவேண்டும் என, அம்பேத்கர் காலனியை சேர்ந்த சவுந்தரியின் உறவினர்கள் கேட்டு வந்தனர்.
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை ஆனந்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வேட்பு மனு பரிசீலனையில் சவுந்தரியும், மூக்கம்மாளும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த அம்பேத்கர் காலனியை சேர்ந்த சவுந்தரியின் உறவினர்கள் சிலர் வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு சவுந்தரியை வற்புறுத்தியுள்ளனர். இதற்கு சவுந்தரி மறுப்பு தெரிவிக்கவே உறவினர்கள் ஆத்திரமடைந்து சவுந்தரியை ஆபாச வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய சவுந்தரி மனமுடைந்து இரவு, 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி சவுந்தரி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவிய நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனையில் சவுந்தரியை சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சவுந்தரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லாவி போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் ஆனந்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

